திருப்பலி வாசகங்கள் – செப்டம்பர் 15, 2022 – வ2

புனித மரியாவின் துயரங்கள் (தூய வியாகுல அன்னை)

நினைவு
இன்றைய நற்செய்தி வாசகம் இந்த நினைவுக்கு உரியது.

முதல் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 31: 1-2ab. 2c-3. 4-5. 14-15. 19 . (பல்லவி: 16a)

பல்லவி: ஆண்டவரே, உம் முகத்தின் ஒளி அடியேன்மீது வீசச் செய்யும்.

1ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்; நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்; உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.

2abஉம் செவிகளை என் பக்கம் திருப்பியருளும்; விரைவில் என்னை மீட்டருளும். – பல்லவி

2cஎனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.

3ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். – பல்லவி

4அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்; ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.

5உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர். – பல்லவி

14ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்; ‘நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.

15என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது; என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். – பல்லவி

19உமக்கு அஞ்சி நடப்போர்க்கு நீர் வைத்திருக்கும் நன்மை எத்துணைப் பெரிது! உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி! – பல்லவி

தொடர்பாடல்

இப்பாடலை முழுமையாகவோ அல்லது சுருக்கமாகவோ (எண் 11. தூய நல்தாயே… முதல்) தேவைக்கேற்ப பாடலாம் அல்லது சொல்லலாம்.

  1. திருமகன் சிலுவையில் தொங்கிய போது அருகில்,
    கண்ணீர் பெருகிடத் துயருடன் அந்தோ!
    நின்றார் வியாகுலத் தாய்மரி.
  2. பொருமலும் வருத்தமும் பொங்கிட ஆங்குத்
    துயருறும் அவரது நெஞ்சை, அந்தோ!
    ஊடுருவிற்றே கூர்வாள், காணீர்.
  3. தேவ சுதனின் அன்பால் அன்னை,
    பேரரும் ஆசி பெற்றவர், அன்று
    எத்துணைத் துயரும் வருத்தமும் கொண்டார்.
  4. அன்புத் தாயவர் மாண்புறு மகனின்
    துன்பம் அனைத்தும் நோக்கிய போது
    கொண்ட துயரமும் வருத்தமும் என்னே!
  5. இத்துணைத் துயரில் மூழ்கித் தவிக்கும்
    கிறிஸ்துவின் அன்னையைக் காணும் போதில்
    எவரும் வருந்தாதிருந்திடுவாரோ!
  6. தம் திருமகனோடு பெருந்துயர் கொள்ளும்
    கிறிஸ்துவின் அன்னையை நோக்கிடும் போதில்
    உளம் உருகாமல் நிற்பவர் யாரோ!
  7. தம்முடைய மக்களின் பாவம் நீங்க
    தாங்கரும் வேதனை, கசையடி ஏற்ற
    தம் திருமகனாம் இயேசுவைக் கண்டார்.
  8. தேனினுமினிய தேவனின் மைந்தன்
    அனைவரும் கைவிட ஆறுதலின்றித்
    தனிமையில் தமது உயிர்விடக் கண்டார்
  9. அன்பின் ஊற்றாம் அன்னையே, அம்மா,
    அடியேன் உம்முடன் அழுது வருந்த,
    உமதுள்ளத் துயரை உணர்ந்திடச் செய்வீர்.
  10. இறைவனாம் கிறிஸ்துவுக் கன்பு செய்து
    என்றும் அவருக் குகந்தவராக,
    என்னுளம் அன்பால் எரிந்திடச் செய்வீர்.
  11. தூய நல்தாயே இவ்வரம் வேண்டும்:
    துயருறும் சிலுவை நாதரின் காயம்
    ஆழமாய் நெஞ்சில் அழுந்திடச் செய்வீர்.
  12. அடியேனுக்காய்க் காயமும் துன்பமும்
    ஏற்கத் திருவுளம் கொண்ட உம் மகனின்
    துயரில் எனக்கொரு பங்கு தருவீர்.
  13. சிலுவை நாதருடன் துயருறவும்,
    பக்தியால் உம்முடன் புலம்பவும்,
    என்றன் உயிருள்ளளவும் அருள் புரிவீரே.
  14. சிலுவையடியில் உம்மோடு நின்று, சிந்தும்
    கண்ணீர் அழுகையில் நானும் சேர்ந்து
    பங்குற விரும்புகின்றேனே.
  15. கன்னியர் தம்முள் சிறந்த கன்னியே,
    கனிவுடன் என்னைக் கடைக்கண் நோக்கி
    உம்மோடழுதிட அருள் செய், அம்மா.
  16. கிறிஸ்துவின் சாவை நானும் தாங்கவும்
    பாடுகள் யாவிலும் பங்கு கொள்ளவும்
    காயம் நினைத்து இரங்கவும் செய்யும்.
  17. நின் மகன் காயம் நினைந்துளம் வருந்தவும்
    அவரது சிலுவையும், சிந்திய இரத்தமும்
    என் மனம் நிரப்ப அருள் செய்வீரே.
  18. என்றன் இறுதித் தீர்ப்பு நாளில் எரியில்
    வீழ்ந்து அவதியுறாமல் கன்னியே,
    என்னைக் காத்திடுவீரே.
  19. கிறிஸ்துவே, நான் இம்மை விட்டங்கே
    வந்திடும் வேளை வெற்றிக் குருத்தைத்
    தாங்க நும் அன்னை வழியாய் அருள்வீர்.
  20. என்னுடல் மரித்து அழியும் போதில்
    என்றன் ஆன்மா பரகதி மகிமை
    எய்திடும் வரத்தை வேண்டி நின்றேன். ஆமென்.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய கன்னி மரியா நற்பேறு பெற்றவர். ஏனென்றால் மறைச்சாட்சியின் வெற்றி வாகையை, ஆண்டவரின் திருச்சிலுவை அடியிலே நின்று, சாகாமலே அவர் பெற்றுக்கொண்டார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

திருமகனின் துன்பம் கண்ட மரியா துயரம் அடைந்தார்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 25-27

அக்காலத்தில்

சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்றுகொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், “அம்மா, இவரே உம் மகன்” என்றார். பின்னர் தம் சீடரிடம், “இவரே உம் தாய்” என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது

உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 33-35

அக்காலத்தில்

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசி கூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

செப்டம்பர்-2022 அக் ►
ஞா 4 11 18 25
தி 5 12 19 26
செ 6 13 20 27
பு 7 14 21 28
வி 1 8 15 22 29
வெ 2 9 16 23 30
3 10 17 24
Archive 2022 2023
Pradeep Augustine: Pradeep Augustine is the founder of Catholic Gallery. He is a passionate Writer, An Artist, a computer geek and a part-time Blogger who loves to write a lot of contents on Catholicism in his free time. He is the founder of the Technical Blog www.GetCoolTricks.com, where he shares a lot of technical Contents. Stay connected with him on his social profiles.
Related Post